Saturday, January 10, 2009

ஷோபா சக்தியின் கொரில்லா—சில குறிப்புகள்* பிரம்மராஜன்

ஷோபா சக்தியின் கொரில்லாசில குறிப்புகள்* பிரம்மராஜன்


மனித குல மேம்பாட்டுக்காகவும் இறுதியான மானுட விமோசனத்திற்காகவும் என நோக்கங் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட இயக்கங்கள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றின் நேரடியானதும் மறைமுகமானதுமான செயல்பாடுகள் பெரும்பாலும் உரிய நோக்கங்களின் எதிர்த்திசையிலே நிகழ்ந்து வந்திருப்பதை சர்தேச வரலாறு நமக்குக் காட்டுகிறது. இயக்கங்களும் அமைப்புகளும் ஒரு தற்காலிக அரசாங்கத்தை நிறுவ மேற்கொள்ளும் யத்தனங்களிலேயே எண்ணற்ற தனிநபர்களின் முகம், மனம், மற்றும் உடல் சிதைவுக்குள்ளாகிறது. இதை விமர்சனம் செய்யவோ, கேள்விக்குட்படுத்தவோ முயல்கிற எவரையுமே--அவர் இயக்கத்தின் சாதாரண அங்கத்தினராக இருந்தாலும் சரி, அமைப்பின் நிறுவன தலைமைக்கு மிக அருகாமைப் பதவி வகித்துக் கொண்டிருக்கும் இன்றியமையாத நிறுவனவாதியாக இருந்தாலும் சரி--அமைப்பு அவர்களைக் காவு கொடுக்கத் தயங்குவதில்லை. தவறியதில்லை. பிரெஞ்சுப் புரட்சியில் தொடங்கி, பாசிசம், இறுதியில் ஸ்டாலினிசம் வரையில் எந்த ஒரு கட்டத்திலும் மாற்றுப் பார்வையும் கருத்தையும் கொண்டவர்கள் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகளாகக் கருதப்பட்டு சுத்தகரிப்பு மூலம் களை எடுக்கப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறார்கள். கருத்தியல் ரீதியான இன்னும் யதார்த்த சாத்தியமில்லாத, பொதுமைப்படுத்தப்பட்ட சமூக மனிதர்களின் பசுமையான எதிர்காலத்தை முன்னிட்டுத்தான் கூர்மை நிறைந்த பல தனிநபர்களை மானுடம் இழந்திருக்கிறது. இதில் இழக்கப்பட்ட தனிநபர்கள் அதுவரை குறிப்பிட்ட இயக்கங்களுக்கு செய்து வந்திருக்கும் ஊழியத்திற்கான பலனை, மதிப்பை, ஏற்பினை எதிர்கால சமூக மனிதன் அறிய முடியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். இயக்கமும் அமைப்பும் அவற்றின் இறுதி நிர்வாக யந்திரமான அரசும் கூட தனிநபர்களை ஒடுக்கி அழிக்கவே செய்யும். ஆகவேதான் அரசாங்கங்கள் இல்லாத நிலையை எய்துவதற்கு நமக்கு அருகதை இன்னும் சில நூற்றாண்டுகளிலாவது வரும் என Borges அவதானித்தார். இரண்டாம் தர யோக்யதை உள்ள அமைப்பாளர்கள் பலர் தீவிரத் ஊழியக்காரர்களை விட எளிதாகக் கட்சியின் மேல் அடுக்குகளை எட்டிப் பிடித்துவிடுவதை ஸோல்ஸெனிட்ஸின் கான்சர் வார்டு நாவலில் சித்தரித்தார்.
எல்லோருக்கும் பொதுவென்ற கட்டுப்பாடுகளையும் நடத்தை விதிகளையும் விதித்து தனிநபர் மீது அபரிமிதமான, எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றன அமைப்புகள். நீண்ட கால இலக்குகளுக்காக இயக்கம் தனது அங்கத்தினர்களை தனித்தன்மையிழக்கச் செய்து முழுமுற்றாய்ச் சரண்புக வைக்கிறது. ஏறத்தாழ கடவுளிடம் முழுமுற்றாகச் சரணடைவதற்கு இது ஒப்பான தெனினும் கடவுள் சில நேரங்களில் காப்பாற்றுபவராக இருக்கிறார். ஆனால் இயக்கத்தலைமை கருணையின்றி சிரச்சேதம் செய்வதிலேயே முனைப்பு கொண்டிருக்கிறது.

இந்த நாவலின் குறிப்பிடத்தக்க முதலாம் அம்சமாக நான் காண்பது அதன் சமகால வாழ்க்கைப் பிரதிபலிப்பு. பிரமாதப்படுத்தக் கூடிய அம்சங்களில் இது ஒன்றா என்று சிலருக்கு கேள்வி எழக்கூடும். தமிழ்ச் சூழலில், குறிப்பாக தற்காலத் தமிழ் இலக்கியத்தில் புனை கதை சமகால வாழ்க்கையிலிருந்து பெரிதும் அகன்று அகழ்வாராய்ச்சிகளிலும், புதைந்த நகர வரலாறுகளிலும், மறைந்தொழிந்த நாகரிகங்களிலும் தன்னை மூழ்கடித்துக் கொண்டிருக்கும் பரிதாப நிலை நிலவுகிறது. இதற்கான காரணங்களாக நேரடியான வாழ்வனுபவ வறட்சியையும் கண்மூடித்தனமாகப் புதிய மோஸ்தர்களைப் பாவித்தலையும் சொல்லலாம். இந்தச் சூழ்நிலையில் ஷோபா சக்தியின் கொரில்லா நாவலை படிப்பது புத்துணர்ச்சி தருவதாக இருக்கிறது. நாவலின் கதை விவரணை மொழி அதன் இயல்பான கொச்சைப் பிரயோகங்களினால் சிறிய தடங்கல்களையும் சந்தேகங்களையும் உண்டு பண்ணுகிறது. எனினும் இதை மிஞ்சி நாவல் சொல்ல வந்த செய்தியை கனகச்சிதமாகச் சொல்லி விடுகிறது. நாவலின் விவரணையில் பராக்குப் பார்த்தல் இல்லாமலிருப்பது எத்தனை ஆறுதலாகயிருக்கிறது. அநேகமாக இந்த நாவலை நான் படித்த இரண்டு தடவைகளிலும் இரண்டு அமர்வுகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளவில்லை. தீவிர வாசிப்பு மனோநிலை கோருகிற கவனத்துடன் படித்தால் 4 மணி நேரத்திற்கு மேல் ஆவதில்லை. மூடி வைக்கத் தோன்றாமல் நான் வாசித்தேன்.

எல்லாம் அறிந்த (omniscient Narrator ) விவரணையளாரின் நோக்கில் கதை சொல்லப்படுகிறது. ஷோபா சக்தி சிறந்த கதைசொல்லியாக இருப்பது மட்டுமன்றி அவருக்குச் சொல்வதற்கு ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. விவரணையாளர் உள்புகுந்து நடப்புகளை அறிய முடியாமலிருக்கும் கதைகளில் வாய்வழிக் கதைகளின் திரும்பச் சொல்லல் முறையைப் பின்பற்றுகிறார் நாவலாசிரியர். எல்லாப் பாத்திரங்களின் நினைவோட்டத்திலும் புகுந்து வெளிவரமுடியும் பலம் இந்த விவரணை உத்தியின் மூலம் கிடைக்கும். பாத்திரங்களுக்குத் தெரியாத உண்மைகளும், ரகசியங்களும் வாசகனுக்கு சில நேரங்களில் முன்கூட்டியே தெரிந்து விடும். நாவலில் இடம் பெறும் தொழில் நுட்பக் குறிப்புகள்--குறிப்பாக ராணுவத் தளவாடங்கள் பற்றியவை--நாவலாசிரியரின் செய்திச்சேகர விற்பன்னத்தன்மையைக் காட்டுவதில்லை. அப்படிச் செய்திகளைக் கொட்டிப் பரப்பி கண்காட்சி வைத்து வாசகனை திசை திருப்பும் வேலையை விட அதிகக் கூடுதலாக கதையின் நிகழ்ச்சிகளை நடத்திச் செல்லும் பொறுப்பு புதினம் எழுதுபவரைக் கட்டாயப்படுத்துகிறது. கொரில்லா என்ற வார்த்தைப் பிரயோகம் பற்றிய அகராதிக் குறிப்புகளும் கூட விலகலானவை என்று எவரும் சொல்லி விட இயலாது. முக்கியமாக நாவலின் தலைப்பு இயக்கக்காரர்களின் கெரில்லாத்தன்மையை சொல்வதில்லை. நாவலின் நாயகனான மூத்த ஏசுராசனின் (அவன் என்றே நாவல் முழுமைக்கும் விளிக்கப்படுகிறது) பட்டப் பெயர் மாத்திரமில்லாது அவனது மூர்க்கக் குணத்திற்கு மறுபெயராக நிற்கிறது. கதாபாத்திரங்களைச் சித்தரிப்பது என்பது ஏதோ கீழ்மையான படைப்புத் தொழில் என்று சமகால தமிழ்ப்புனைகதை யாளர்கள் எண்ணிக் கொண்டிருக்கையில் கொரில்லா நாவலின் பாத்திரப் படைப்பு வாசகனுக்கு நிறைவைத் தருவதாக இருக்கிறது.

புனைகதையின் விவரணைப் பூகோளத்தினை எடுத்துக் கொள்ளலாம். சிலர் தமிழில் இதை பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஏதோ ஒரு டூரிஸ்ட் கையேட்டில் இருப்பது போல எழுதுவது வழக்கமாக இருந்தது. இதுவும் ஒருவித பராக்குப் பார்க்கும் தன்மையைச் சேர்ந்ததுதான். ஷோபா சக்தி நாவலின் பூகோளத்தினை அவசியப்பட்ட இடங்களில் மாத்திரம் சிக்கனமாகச் சொல்லி விடுகிறார். குறைந்தபட்ச வரைபடத் தகவல் இன்றி நாவல் சொல்லும் விவரணையை பின்பற்றிச் செல்வது சிரமமாகி விடக் கூடும்.

நாவலின் தொடக்கம் சில சிறுகதைகளைக் கொண்டு அடுக்கப்பட்டது போலத் தோன்றினாலும் 40 பக்கங்களுக்கு மேற்பட்டு பிரதான கதையோட்டத்தையே வலியுறுத்துகிறது விவரணை. சிறு சிறு கதையோட்டங்கள் பிரதான கதையோட்டத்தில் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை உருவி எடுத்து விட முடியாது. நாவலின் வடிவமைப்பும் இறுக்கமாகக் கட்டப் பட்டிருக்கிறது. படிக்கும் பார்வையோட்டத்தினை ஆசுவாசப் படுத்தக் கூடிய, கொஞ்சம் வேதாகமப் புத்தகத்தை நினைவூட்டும்படியான புத்தக உள் அச்சமைப்பு. சில இடங்களில் சிங்கள மொழி வாக்கியப் பிரயோகங்களுக்கு நாவாலாசிரியர் சிரத்தை எடுத்து தமிழ் மொழிபெயர்ப்பு தந்திருக்கிறார். சில முக்கியமான இடங்களில், புரியப்பட வேண்டிய இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கியம் தரப்பட்டிருப்பது வாசகனை சோதிக்கக் கூடும். சம்பிரதாய ஃபிளாஷ் பேக் உத்தியைக் கைக் கொள்கிறார் நாவலாசிரியர். இருப்பினும் பிரின்சி என்ற பெண் பாத்திரத்தைப் பொருத்தவரை, அவளின் முடிவு ஃபிளாஷ் ஃபார்வாடாகியிருக்கிறது. நாவலின் தொடக்கத்திலேயே இறந்து போய்விடுகிற பிரின்சி நாவலின் பிந்திய பகுதியில்தான் பூப்பருவம் எய்துவதாகவே வருகிறது.
மேலோட்டமாகப் படித்தால் நிஜத்தகவல்களை வைத்து எழுதப்பட்ட கறாரான யதார்த்த வகை நாவல் போன்று தோன்றுகிறது. ஆழ்ந்து படித்தால்தான் இது வெறும் யதார்த்த வகை நாவலில்லை என்பது புரியும். இதில் இடம் பெறும் பல கதாபாத்திரங்களின் வாழ்க்கையெல்லைகள் நிஜ வருடங்களில் அடிக்குறிப்புகளில் தரப்பட்டுள்ளன. அவற்றை வாசகன் சரிபார்த்துக் கொள்ளும் நோக்கமிருப்பின் பார்த்துக் கொள்ளலாம். எனினும் நாவலின் நோக்கம் அதுவாக இருக்காது. வாழ்வின் நிஜப் பாத்திரங்களை வைத்துக் கட்டப் பட்டிருப்பதாலேயோ என்னவோ அவை வாழ்வின் பாத்திரங்களை விட அசுர பரிமாணங்கள டைந்து நிற்கின்றன. இரவல் செய்திக் கத்தரிப்புகளை வைத்து இந்த நாவலை எழுதுவது சாத்தியமே இல்லை. மியூசியம்களைக் குடைந்தும், இன்டர்வியூக்கள் நடத்தியும் கொரில்லா மாதிரியான நாவலை எழுத முடியாது.
கொரில்லா நாவலின் நாயகன் மூத்த ஏசுராசன் என்று சொன்னோம். இருப்பினும் நாவலின் விவரணை நகர்வுக்கு காரணமாக இருப்பவர் ரொக்கிராசன் என்கிற யாகோப்பு அந்தோனிதாசன். இவரின் பள்ளிப் பருவத்தில் தொடங்கி, புலிப்டையில் ஒரு ரெக்ரூட்டாக ஆகி, பிறகு தன் சொந்த இடமான குஞ்சன் வயல் கிராமத்திற்கே புலிப்படையின் சென்ட்ரி பாய்ண்ட் காம்பில் துணைக் கம்மாண்டராக வருகிறார். ரொக்கிராஜனின் உயர்வு தாழ்வுகளை புலிப்படைக்கு உள்ளேயும் அதிலிருந்து விலக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நாவல் நமக்கு அளிக்கிறது. பெயர்கள் பற்றியஅப்செஷன் இந்த நாவலில் இருக்கிறது. புலிப்படையில் இயக்கப் பெயராக வேறு ஒரு பெயரை வைக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்ட ரொக்கிராஜூக்கு தனக்கு அராபத் என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அதற்கு முன்பாக ரொக்கிராஜூக்கு சஞ்சய் என்ற பெயர் வைக்கப்படுகிறது. எனினும் இறுதியில் கொரில்லாவின் மகனாகப் பிறந்த காரணத்தினால் ரொக்கிராஜூக்கும் காம்ப்பில் கொரில்லா என்ற பெயர் நிலைக்கிறது. கொரில்லா என்று கூப்பிடுவது பற்றி ஆட்சேபம் தெரிவிக்காதவர் ரொக்கிராஜின் தகப்பன் காட்டாற்ற ஏசுராஜன். ஆனால் கொரில்லா என்ற பெயரை ரொக்கி விரும்புவதில்லை. நாவல் இறுதியில் ரொக்கி புதின விவரணையாளரால் அந்தோனி என்றழைக்கப்படுகிறார். எத்தனைக்கெத்தனை ஜூனியர் கொரில்லாவான இவருடைய பெயர்கள் மாறுதலடைகின்ற னவோ அந்தளவு அவர் வாழ்க்கை நிலையிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரொக்கியின் மதச் சார்பான தன்மை இயக்கத்திலிருந்து கழற்றிவிட்ட பிறகு ஒரு அகதியாகக் கூடுதலடைவது போல சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அவர் தொடக்கத்திலிருந்தே மதநம்பிக்கையுடையவராகத்தான் இருக்கிறார். பொய்க் குற்றச் சாட்டுக்களுக்காக இயக்கத்தினரால் பிடித்துச் செல்லப்பட்டு சித்தரவதைக்குள்ளான பிறகு மதம் மீண்டும் ஒரு சரண்புகுமிடமாக ஆவதை கூர்ந்து படிப்பவர்கள் அறியலாம். ஏனெனில் புதினத்தின் விவரணையோட்டம் எந்த ஒரு தகவலையும் அழுத்தம் கொடுத்தோ குறைத்தோ சொல்வதில்லை. குமுதினி என்கிற படகில் வந்த 50ற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிங்களவர்களால் கொன்று சிதைக்கப்பட்டதைக் கூட அளவான தகவல்களுடன்தான் சொல்லியிருக்கிறார். மனதைப் பிழிய வைக்கிற ஒரு இடம் இது. ஆயினும் ஷோபா சக்தி இதை செண்டிமென்டல் சுரண்டலுக்காக இம்மாதிரி சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த முதிர்ச்சி பாராட்டப்பட வேண்டும். இதே போன்று சினிமாச் சூழ்நிலை அளவுக்கே மின்சாரமேற்றப்பட்டதாக இருக்கும் தகப்பன் கொரில்லாவை எதிரியாக எதிர் கொள்ளும் ரொக்கிராஜின் நிலைமையும் கூட பதட்டமின்றி கையாளப்பட்டிருக்கிறது.

பிரின்ஸி நிர்மலா ஏசுதாசன், மற்றும் சலங்கை, ஜெயசீலி, ஜெனோவா ஆகிய பெண் பாத்திரங்கள் கரிசனத்துடன் அணுகப்பட்டிருக்கிறார்கள். பெண் வெறுப்பு என்று குறிப்பிட்டு ஏதும் ரொக்கிக்கு இருப்பதாகச் சொல்லப்பட முடியாதெனினும் தங்கை பிரின்ஸியைத் தவிர பிறரை அசட்டையாகத்தான் நிருபிக்கிறார். அண்ணன் தங்கைக்கு இடையிலான ஒரு மென்மையான உறவினை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார். இந்த இடத்தை செண்டிமென்டலாக்க நினைத்தால் ஒரு அத்தியாயம் எழுதியிருக்க முடியும். சலங்கை என்று அழைக்கப்படும் பாலினத் தொழிலாளியும் புரிதலுடன் படைக்கப்பட்டிருக்கிறார்.(இது போன்ற ஒரு பாலினத் தொழிலாளியை தேசத்துரோகி சிறுகதைத் தொகுதியில் பார்க்க முடியும்) ஜெயசீலிக்கு சற்றே அதிகமான இடங்களும் பக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஜெயசீலி வாழ்க்கையிலிருந்து காணாமல் போனது போலவே நாவலிலிருந்தும் மறைந்து போகிறார்.

பாரிசில் நடப்பதாக அமையும் நாவலின் இறுதி அத்தியாயங்களுக்கு வேண்டிய கவனக் குவிப்பினை என்னால் செய்ய முடியாது போயினும் நாவலின் மிக நவீனத் தன்மைக்கும் நாவலின் பிரதான விவாதப் பொருளுக்கும் காரணமானவை அவையே என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். குறிப்பாக வன்முறையிலிருந்து மீள்வதற்கு நாம் ஒரு மகாத்மாவுக்காக காத்திருக்கத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் அங்குதான் எழுப்பப்படுகிறது. சகலத்தையும் ஒருவர் மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டம் வரும்போது மதம் அடைக்கலமாகத் தோன்றும். ஏன் ஜாதியும் இனமுமே கூட அப்படித் தோன்றக் கூடுமென்பதைப் பற்றிய விவாதப் புள்ளிகள் நாவலின் இந்தக் கடைசி அத்தியாயங்களில்தான் கிடைக்கின்றன. வன்முறையின் மீதிருந்த நாட்டம் போர் எதிர்ப்பாக மாறும். அப்போதுதான் ரொக்கிராஜன் என்கிற யாகோப்பு அந்தோனிதாசன் விலகல்வாதியாகக் கூட ஆகிவிடுகிறான்.
சமீபத்தில் வந்த மிக முக்கியமான தமிழ் நாவலாக மட்டுமன்றி ஒரு இலக்கிய ஆவணமாக கொரில்லா கருதப்படுதல் வேண்டும். குறிப்பாக தலையணை சைஸ் நாவல்கள் கோலோச்சும் இந்தக் காலகட்டத்தில் கொரில்லா நாவலின் பக்க அளவு மிகவும் சிக்கனமாகக் கையாளப்பட்டிருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. தவிரவும் நாவலாசிரியனின் கச்சாப்பொருள் மீதான கட்டுப்பாடை வெளிப்படுத்தகிறது.

*இந்த சிறுகட்டுரை ()குறிப்புகள் கொரில்லா நாவல் வெளியீட்டு சமயத்தில்(ஜனவரி 2002) எழுதி வாசிக்கப்பட்டது. வேறெந்த சிற்றிதழ்களிலும் வந்ததா என்பது பற்றி ஞாபகமில்லை)

0 comments:

Post a Comment